மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

கரூர், மாயனுார் கதவணைக்கு, தண்ணீர் வரத்து நேற்று அதிகரித்தது.

மேட்டூர் அணையில் இருந்து, டெல்டா பகுதிக்கு குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன், 12ல் காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.நேற்று காலை நிலவரப்படி, காவிரியாற்றில் வினாடிக்கு, 31 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.


நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 17 ஆயிரத்து, 62 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 21 ஆயிரத்து, 876 கன அடியாக அதிகரித்தது. அதில், 20 ஆயிரத்து, 706 கன அடி தண்ணீர் முழுவதும், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்காக காவிரியாற்றில் திறக்கப்பட்டது. தென்கரை வாய்க்கால், கீழ் கட்டளை வாய்க்காலில், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில், 1,170 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 23.35 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 90 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

Advertisement