செஞ்சி கோட்டையை கட்டியது வன்னியரா: ராமதாசுக்கு யாதவ இயக்கம் கேள்வி யாதவ மக்கள் இயக்கம் கேள்வி

3

செஞ்சி: செஞ்சி கோட்டை வன்னியர்கள் கட்டியது என்பதற்கான ஆதாரத்தை, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட முடியுமா என, யாதவ மக்கள் இயக்க நிறுவனர் ராஜாராம் கேள்வி எழுப்பி உள்ளார்.


விழுப்புரத்தில் அவர் அளித்த பேட்டி:



செஞ்சி கோட்டை ஆசியாவின் மிகப்பெரிய கோட்டை. இதை, 'யுனெஸ்கோ' உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்ததோடு, மராட்டிய மன்னர்கள் கட்டிய 12 கோட்டைகளில் செஞ்சி கோட்டையும் ஒன்று என, தவறாக கூறி உள்ளனர்.




ஆனால், கி.பி. 1190ல் ஆனந்த கோன் என்பவர் தான் செஞ்சி கோட்டையை கட்டினார்.
அவரது வம்சாவழியினர் 300 ஆண்டு காலம், செஞ்சி கோட்டையை ஆண்டனர். இந்திய தொல்லியல் துறையும், பிரெஞ்ச் வரலாற்று ஆய்வாளர் மெக்கன்சியும் இதை ஆய்வு செய்து வெளியிட்டு உள்ளனர். செஞ்சியை ஆண்ட பல மன்னர்களில் மராட்டியர்களும் உண்டு. இதை அறியாமல், முதல்வர் ஸ்டாலினும், வரவேற்று வாழ்த்தியது நியாயமில்லை.




அவர், தொல்லியல் துறையினருடன் நேரடியாக செஞ்சி கோட்டையில் ஆய்வு செய்து, மராட்டிய மன்னர் கட்டியது என்பதை மாற்றி அமைக்க வேண்டும்.



இல்லாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம். இந்த விஷயத்தில், நாம் தமிழர் கட்சி சீமானை தவிர, எந்த அரசியல் கட்சியும், எதிராக பேசவில்லை.



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், செஞ்சி கோட்டையை, காடவன் என்ற வன்னியன் கட்டியதாக கூறுகிறார். அவர் தவறான தகவலை மக்களுக்கு தெரிவிக்கக் கூடாது.



செஞ்சி கோட்டையை வன்னியர்கள் கட்டியது என ஆதாரங்கள் உள்ளதா?, இருந்தால் வெளியிட முடியுமா. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement