தமிழக புதிய டி.ஜி.பி., யார்? மத்திய அரசுக்கு பட்டியல்

1

சென்னை : தமிழகத்தில், சட்டம் - ஒழுங்கு புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான, ஒன்பது மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பெயர்கள் அடங்கிய பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

கடந்த, 2023 ஜூன் மாதம், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக பொறுப்பேற்றார்.

இவர், ஆக., 31ல் ஓய்வுபெற உள்ளார். இதனால், புதிய டி.ஜி.பி.,யை நியமனம் செய்யும் பணியில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

அடுத்த ஆண்டு சட்ட சபை தேர்தல் நடக்க இருப்பதால், சங்கர் ஜிவாலுக்கு ஆறு மாதம் பணி நீட்டிப்பு வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், இதில் உண்மை இல்லை என, சங்கர் ஜிவால் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சட்டம் - ஒழுங்கு புதிய டி.ஜி.பி.,யை தேர்வு செய்வதற்கான பட்டியல், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பட்டியலில், டி.ஜி.பி., ரேங்கில் பணிபுரிந்து வரும் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகளான தீயணைப்பு துறை இயக்குநர் சீமா அகர்வால், ஆவின் விஜிலன்ஸ் முதன்மை அதிகாரி ராஜிவ்குமார், தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோட் ஆகயோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

அதேபோல, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் அபய்குமார் சிங், ரயில்வே டி.ஜி.பி., வன்னியபெருமாள், மத்திய அரசு பணிக்கு சென்றுள்ள மகேஷ்குமார் அகர்வால், சஞ்சய் மாத்துார், காவல் துறை தலைமையிடத்து டி.ஜி.பி., வினீத்தேவ் வாங்கடே, காவல் துறை நிர்வாக பிரிவு டி.ஜி.பி., வெங்கட்ராமன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

இவர்களில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு செய்து, மாநில அரசுக்கு அனுப்பி வைக்கும்.

அதில் இருந்து, ஒரு ஐ.பி.எஸ்., அதிகாரியை, சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக மாநில அரசு நியமனம் செய்யும்.

அந்த வகையில், சீமா அகர்வால், சந்தீப்ராய் ரத்தோட் ஆகியோருக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதாக, டி.ஜி.பி., அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement