கட்டடங்களை வரைமுறைப்படுத்துவதால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி : அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டத்தால் மக்கள் சிரமம் போகும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி சட்டசபையில் அங்கீகாரம் இல்லாத கட்டடங்களை வரைமுறைப்படுத்தும் திட்டத்தை நேற்று துவக்கி வைத்த முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:

அனுமதியில்லாத கட்டடங்கள் மற்றும் கட்டட அனுமதிக்கு புறம்பாக கட்டப்பட்ட 1.50 லட்சம் கட்டடங்கள் உள்ளன.

இதனை ஒழுங்குபடுத்த வேண்டுமென்ற கோரிக்கை மக்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு ஒருமுறை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்திற்காக தனி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. அதில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கட்டணம் விண்ணப்பித்த அவர்களுக்கு கட்டடங்களை ஒழுங்குமுறைப்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படும். அதன்மூலம் அவர்கள் வங்கிகளில் கடன் பெறலாம், எந்த பிரச்னையும் இருக்காது. இது பல ஆண்டுகளாக உள்ள கோரிக்கையாகும். இதன் மூலம் மக்களுக்கான சிரமம் குறைவதுடன், அரசிற்கு வருவாய் அதிகரிக்கும். இதனை ஒழுங்குமுறைப்படுத்துவது தான் முக்கிய பணியாக இருந்தது. அப்பணி பல ஆண்டுகளாக முயற்சி செய்து, தற்போது நிறைவடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement