கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் அடுத்த மாங்குப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி ரதி, 42; இவர், நேற்று காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க வந்தவர், தீடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

உடன் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், 'மாங்குப்பம் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அதனருகே வீட்டு மனை 132 சதுர மீட்டர் பரப்பளவில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வருகிறேன்.

இந்நிலையில், எவ்வித அனுபவ பாத்தியமும், உரிமையும் இல்லாத எங்கள் கிராமத்தை சேர்ந்த செந்தில் உள்ளிட்டோர், அந்த சொத்துக்கு உரிமை கொண்டாடி தகராறு செய்கின்றனர். வீட்டை இடிப்பதாக மிரட்டுகின்றனர்.

தற்போது எனது வீட்டை பூட்டிவிட்டு, என்னை வெளியே விரட்டியதோடு, வீட்டின் எதிரே ஜல்லி, மணலை கொட்டி வழியை அடைத்துள்ளனர்' என்றார்.

இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது .

Advertisement