ஜூலை 25ல் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி அறிவிப்பு

சென்னை: வரும் 25ம் தேதி முதல் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் தொடங்க உள்ளதாக பா.ம.க., தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை அகற்ற வேண்டும்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 10 வகையான உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடன் வரும் 25ம் நாள் தொடங்கி தமிழகம் முழுவதும் 100 நாள்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு 1. சமூக நீதிக்கான உரிமை , 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை ,4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை,5. வளர்ச்சிக்கான உரிமை, 6.நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை ,7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை, 8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை,9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை, 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பன தான் இந்த உன்னத பயணத்தின் முதன்மை நோக்கங்களாகும்.
பசுமைத் தாயகம் நாளாக கொண்டாடப்படும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாளான ஜூலை 25ம் நாள் மாலை சென்னையை அடுத்த திருப்போரூரில் தொடங்கவுள்ள இந்தப் பயணம் தமிழகத்தின் முக்கியத் தொகுதிகள் வழியாக பயணித்து தமிழ்நாடு நாளான நவம்பர் 1ம் தேதி தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
இந்தப் பயணத்தின் முதல்கட்ட விவரங்கள் வருமாறு:
ஜூலை 25 - திருப்போரூர் (நிகழ்ச்சி தொடக்க விழா)
ஜூலை 26 - செங்கல்பட்டு, உத்திரமேரூர்
ஜூலை 27 - காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் (காலை: வையாவூர் நத்தப்பேட்டை ஏரிகள் மாசுபாடு பார்வையிடல் - நெசவாளர்களுடன் சந்திப்பு)
ஜூலை 28 - அம்பத்தூர், மதுரவாயில் (காலை: குப்பை எரிஉலை விழிப்புணர்வு நிகழ்ச்சி மாத்தூர்)
ஜூலை 31 - கும்மிடிப்பூண்டி (காலை: அறிவுசார் நகரம் பார்வையிடல்)
ஆகஸ்ட் 1 - திருவள்ளூர், திருத்தணி
ஆகஸ்ட் 2 - சோளிங்கர், ராணிப்பேட்டை
ஆகஸ்ட் 3 - ஆர்காடு, வேலூர் (காலை: ராணிப்பேட்டை குரோமியம் மாசு பார்வையிடல்) ஆகஸ்ட் 4 - வாணியம்பாடி, திருப்பத்தூர்
அடுத்தக்கட்ட பயண விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளையும், நலன்களையும் மீட்டெடுப்பதற்கான இந்த தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.