52 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கம்: பீஹாரில் தேர்தல் கமிஷன் அதிரடி

2

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே பீஹாரில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் வாயிலாக, 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, போலி வாக்காளர்களை தடுக்கும் வகையில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டது.

இந்நடவடிக்கைக்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளனர். இதற்கிடையே வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் வாயிலாக, பீஹாரில் உள்ள 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து தலைமை தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கை:

பீஹாரில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமின் வாயிலாக, 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இதில், 18 லட்சம் பேர் இறந்துள்ளனர்; 27 லட்சம் பேர், தங்கள் பெயரை வேறு தொகுதிகளுக்கு மாற்றியுள்ளனர்; ஒரே பெயரில், இரண்டு தொகுதிகளில் இடம்பெற்ற ஏழு லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

இம்முகாமில், வாக்காளர்கள் தங்கள் விண்ணப்பத்தை உரிய ஆதாரங்களுடன் பதிவு செய்யாவிட்டாலும், வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படுவர். ஏற்கனவே திட்டமிட்டப்படி, வரும் 1ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள், திருத்தங்கள் மேற்கொள்ளவோ, நீக்கவோ வரும் செப்டம்பர் 1ம் தேதி வரை ஆட்சேபம் தெரிவிக்கலாம். இதைத்தொடர்ந்து அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் செப்., 30ம் தேதி வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement