சென்னையில் 'மாஸ்டர்ஸ்' செஸ்

சென்னை: 'சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்' செஸ் தொடரின் மூன்றாவது சீசன், வரும் ஆகஸ்ட் 6 முதல் 15 வரை, சென்னை, ஹயாத் ஓட்டலில் நடக்க உள்ளது.
தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ. 1 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மாஸ்டர்ஸ், சாலஞ்சர்ஸ் என இரு பிரிவுகளில் 20 பேர் பங்கேற்க உள்ளனர்.
மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜோர்டான் வான் பாரஸ்ட், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் உட்பட 10 பேர் பங்கேற்கின்றனர். கடந்த 2024ல் சாலஞ்சர் பிரிவில் கோப்பை வென்றதால் இந்தியாவின் பிரனவ், இம்முறை மாஸ்டர்ஸ் பிரிவில் களமிறங்குகிறார்.
இந்தியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான சாலஞ்சர் பிரிவில் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்கா, வைஷாலி, ஹரிகா, அபிமன்யு, ஆர்யன், அதிபன் பாஸ்கரன், இனியன், பிரனேஷ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பரிசு எவ்வளவு
மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றால் ரூ. 25 லட்சம், 2, 3வது இடம் பெற்றால் ரூ. 15 லட்சம், ரூ. 10 லட்சம் பரிசு கிடைக்கும். தவிர, சாம்பியன் வீரர், 'பிடே' தரவரிசையில் 24.5 புள்ளி பெறலாம். இதனால் அடுத்த ஆண்டு நடக்கும் உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.
* சாலஞ்சர்ஸ் பிரிவில் வென்றால் ரூ. 7 லட்சம், 2026-ல் மாஸ்டர்ஸ் பிரிவில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படும்.

Advertisement