அரசு மருத்துவமனையில் கைதி வார்டுகள் தயார்

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சத்தில் கைதிகள் வார்டு மராமத்து செய்யப்பட்டு தயாராக உள்ளது.

வழக்கமாக ஆண்கள் சிறைவார்டு எப்போதும் நிரம்பியிருக்கும். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய கண்காணிப்பிற்கு டாக்டர்கள் இங்கு பரிந்துரை செய்கின்றனர். அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு தவிர மற்ற அனைத்து துறை சார்ந்த சிகிச்சைகளுக்கும் கைதிகள் வார்டில் தான் சிகிச்சை பெற முடியும். ஆடவர் சிறைவார்டை புதுப்பிக்க 2 மாதங்களுக்கு முன் திட்டமிடப்பட்டது. இதனால் பொது நோயாளிகளுடன் எந்தெந்த வார்டுகளில் கைதிகள் சிகிச்சை பெற்றனரோ, அங்கே போலீசார் கண்காணித்து வந்தனர்.

ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் 22 படுக்கைகளுடன் கூடிய தரைத்தளம், மேல்தளத்தில் போலீசார் காத்திருப்பு அறை, கழிப்பறையுடன் புதுப்பிக்கும் பணிகள் முடிந்தது. எதிரிலுள்ள பெண்கள் சிறைவார்டில் 8 படுக்கைகளும் புதுப்பிக்கப்பட்டன. ஜன்னல்களில் கம்பி வலையுடன் கூடிய பாதுகாப்பு, வார்டுக்குள்ளேயே கழிப்பறை, டாக்டர்கள் வந்து பார்க்கும் வசதி அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. சிறைவார்டு இன்று (ஜூலை 23) திறக்கப்பட்டு கைதிகள் அங்கே மாற்றப்பட உள்ளனர்.

Advertisement