கேரளாவில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

திருவனந்தபுரம்: கேரளாவில் 6 மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது; விபா புயல் காரணமாக கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய 6 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்படுகிறது, என தெரிவித்துள்ளது.


இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இடுக்கி, எர்ணாகுளம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டயத்தில் உள்ள கஞ்சிராப்பள்ளி, மீனச்சில், கோட்டயம் ஆகிய 3 தாலுகாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.


கேரளாவில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிமலை, பம்பை, மொக்ரல் மற்றும் பல்லிக்கல் ஆகிய ஆறுகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement