பாம்பனில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

ராமேஸ்வரம்: வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மேற்குவங்க மாநிலம் கோல்கட்டா- வங்கதேசம் இடையே மையம் கொண்டுள்ளது. இதன்காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது.


இந்த தொலைதுார வானிலை எச்சரிக்கையால் நேற்று பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதன் மூலம் இப்பகுதியில் நிறுத்தியுள்ள படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைக்க மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.


தடை விதிப்பு: இன்று பாக்ஜலசந்தி கடலில் சூறாவளி வீசி கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலை எழும் என வானிலை மையம் தெரிவித்தது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.

Advertisement