ராகுல் போன்று முதல்வர் ஸ்டாலினும் தவறை உணர்ந்து கொள்வாரா; அன்புமணி கேள்வி

9

சென்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் ராகுல் தமது வரலாற்றுத் தவறை உணர்ந்து கொண்டது போல், முதல்வர் ஸ்டாலினும் உணர்ந்து கொள்வாரா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் கூறியிருக்கிறார். தாமதம் ஆனாலும் தமது தவறை அவர் உணர்ந்திருப்பது மிகச்சரியான நிலைப்பாடு.


பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2011ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பை ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று அன்றைய அரசின் அங்கமாக இருந்த பாமக வலியுறுத்தியது.

டில்லியில் நேற்று நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஓ.பி.சி., மாநாட்டில் பேசும் போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் தெரிவித்திருக்கும் இன்னொரு தகவல் மிகவும் முக்கியமானது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததும் ஒரு நல்ல தவறு தான்.


அப்போது அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், தெலுங்கானாவில் இப்போது நடத்தப்படிருப்பது போன்ற சமூகத்தின் எக்ஸ்ரே பதிவைக் காட்டக்கூடிய சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தியிருக்க முடியாது என்று ராகுல் கூறியிருக்கிறார். தமிழகத்தின் கோணத்தில் இந்தக் கருத்து மிகவும் முக்கியமானது.


மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ராகுல் கூறியுள்ள கருத்தின் பொருளாகும். இதைத் தான் பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. கர்நாடகத்தில் 2வது முறையாக நடத்தப்படவுள்ள கணக்கெடுப்பும் இதைத் தான் காட்டுகிறது.


ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடிய வில்லை. அவரைப் பொறுத்தவரை ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு ஜாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக்கொண்டுவரக்கூடியது.


அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது. இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதல்வர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை.

ஆட்சியை இழந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு ராகுல் உணர்ந்த தவறை ஸ்டாலின் பதவிக்காலத்திலேயே உணர வேண்டும். தமிழகத்தில் மாநில அரசின் சார்பில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிடவேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறி உள்ளார்.

Advertisement