வங்கி கணக்குகளை கொடுத்து எதிர்காலத்தை தொலைக்கும் இளைஞர்கள்; புதுச்சேரியில் அதிர்ச்சி ரிப்போர்ட்

புதுச்சேரியில் கடந்த ஏழு ஆண்டுகளாகவே சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. சைபர் குற்றவாளிகளை போலீசாரும் பொறி வைத்து பிடித்து சிறையில் தள்ளி வருகின்றனர்.


இந்த சைபர் கும்பலில் கல்லுாரி மாணவர்களும் அண்மை காலமாக அடிக்கடி சிக்கி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனைக்கும் சைபர் குற்றவாளிகளுக்கும், கல்லுாரி மாணவர்களுக்கு நேரடி தொடர்பு ஏதும் இல்லை. அப்படி இருந்தும் ஏன் சைபர் குற்றவாளிகளாக கல்லுாரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு வருகின்றனர். அவர்களது எதிர்கால கனவும் கலைந்து போய் விடுகின்றது.




கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து சைபர் கிரைம்களில் சிக்கி வருவது தொடர்பாக சைபர் கிரைம் போலீசாரிடம் கேள்வி எழுப்பியபோது, 'எல்லாமே போதை படுத்தும் பாடு தான். இன்றைய இளைஞர்கள் போதையின் பக்கம் சென்றுவிட்டனர். போதைக்காக எது வேண்டுமானாலும் செய்கின்றனர். பீர், பிராந்தி என்று இருந்த இளைஞர்கள், கல்லுாரி மாணவர்கள் தற்போது கஞ்சாவில் மூழ்கி கிடக்கின்றனர்.



கல்லுாரி பார்ட்டி என்றால் கட்டாயம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் உள்ளே நுழைந்துவிடுகின்றன. அப்படியே கஞ்சாவு கும்பலும் வந்துவிடுகின்றன.கல்லுாரி மாணவர்களிடம் போதை பொருட்களை கொடுக்கும் கும்பல் அவர்களிடம் வங்கி கணக்கு விபரங்களை வாங்கி கொள்கின்றனர்.



விஷயம் தெரியாத கல்லுாரி மாணவர்கள் ஆதார், வங்கி கணக்குகளை தந்து விட்டு, போதை பொருட்களை வாங்கி உல்லாச உலகத்தில் மிதக்கின்றனர்.ஆனால் போதை கும்பலோ அவர்கள் வாங்கிய வங்கி கணக்கு விபரங்களை அப்படியே சைபர் குற்றவாளிகளிடம் தந்துவிட்டு, பணத்தை வாங்கி கொள்கின்றனர்.



இப்படி தான் கல்லுாரி மாணவர்கள் சமீபகாலமாக சைபர் குற்றங்களில் சிக்கி வீழ்ந்து
எதிர்காலத்தை தொலைத்து வருகின்றனர். வங்கி கணக்கு விவரங்களில் மாணவர்கள் விழிப்பாக இல்லாவிட்டால் யாரும் ஏதும் செய்ய முடியாது. சிறைக்கு தான் போக முடியும் என்றனர் கவலையாக....
என்ன கல்லுாரி மாணவர்களே.. சைபர் போலீசார் சொல்வது புரிகிறதா....

Advertisement