பழுதாகி நின்ற மின்சார பேருந்தால் வியாசர்பாடியில் வாகன நெரிசல்

வியாசர்பாடி, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாநகர அரசின் தாழ்தள மின்சார பேருந்து, திடீரென பழுதாகி நின்றதால், வியாசர்பாடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வியாசர்பாடியில் உள்ள மாநகர பேருந்து பணிமனையில் இருந்து தாழ்தள மின்சார பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செங்குன்றத்தில் நேற்று காலை புறப்பட்ட தடம் எண் '57' மின்சார பேருந்து வள்ளலார் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. முல்லை நகர் நடுவே, இந்த பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றது.

தகவலறிந்து வந்த தொழில்நுட்ப குழுவினரால், மின்சார பேருந்தை அங்கேயே சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து ஓட்டுநர், நடத்துநர், தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் பகுதிமக்கள் சேர்ந்து, பழுதாகி நின்ற பேருந்தை தள்ளிச் சென்றனர்.

மின்சார பேருந்தில் இருந்த டி.சி., கன்வெர்ட்டர் பழுதானதே, பேருந்து நடுவழியில் நின்றதற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஓட்டுநர்கள் கூறுகையில், 'தாழ்தள மின்சார பேருந்தை இயக்க, ஓட்டுநர்களுக்கு ஆறு மாத பயிற்சியே வழங்கப்பட்டுள்ளது.

'இதனால் தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படும்போது எங்களால் கையாள முடிவதில்லை. போதிய பயிற்சி இல்லாததால், பேருந்து பழுதானால் என்ன செய்வதென தெரியாமல் தவிக்கிறோம்' என்றனர்.

Advertisement