பா.ஜ.,விடம் இருந்து முதலில் அ.தி.மு.க.,வை மீட்டெடுங்கள்: பழனிசாமிக்கு உதயநிதி அறிவுரை

18

சென்னை: ''தமிழகத்தை மீட்போம் என சொல்லிக் கொண்டிருக்கும் பழனிசாமி, முதலில் பா.ஜ.,விடம் இருந்து, அ.தி.மு.க.,வை மீட்கும் வேலையை பார்க்க வேண்டும்,'' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.

சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், அவர் பேசியதாவது:



பல கட்சிகள், பூத் ஏஜன்டு களை நியமிக்கவே சிரமப்படுகின்றன. ஆனால், பூத்துக்கு ஒரு இளைஞர் அணி நிர்வாகியை தி.மு.க., நியமித்துள்ளது.



இந்தியாவில் எந்த கட்சியிலும், இளைஞர் அணியில் மட்டும், 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக இருந்தது கிடையாது. தி.மு.க., இளைஞர் அணி மீது, ஏதேனும் சின்ன தவறு கிடைத்து விடாதா என, எதிர்க்கட்சிகள் காத்துக் கொண்டிருக்கின்றன.



இந்தியாவில் முதல் ஐந்து முதல்வர்களின் பட்டியலில், நம் முதல்வரின் பெயர் உள்ளது. இதை பொறுக்க முடியாமல்தான், மத்திய பா.ஜ., அரசு தொல்லை கொடுத்து வருகிறது; நிதி உரிமையை தொடர்ந்து பறித்து வருகிறது.



புதிய கல்விக் கொள்கை என சொல்லி, ஹிந்தியை தமிழகத்திற்குள் திணிக்க பார்க்கின்றனர்.
தொகுதி மறுவரையறை என்ற பெயரில், தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளை, குறைக்க முயற்சிக்கின்றனர்.


இதையெல்லாம் எதிர்த்து குரல் கொடுக்கக் கூடிய ஒரே தலைவர், முதல்வர் ஸ்டாலின்.




'ஓரணியில் தமிழகம்' என்ற முன்னெடுப்பை, துவக்கி உள்ளார். இதில், 2 கோடி பேரை கட்சியில் இணைத்து உள்ளோம். மக்கள் சாரை சாரையாக, தி.மு.க.,வை தேடி வருகின்றனர். இதை பார்த்து, அ.தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் பயம் வந்து விட்டது. அதனால் தான், பழனிசாமி எங்கு சென்றாலும், 'ஓரணியில் தமிழகம்' குறித்து புலம்பிக் கொண்டிருக்கிறார்; 'தமிழகத்தை மீட்போம்' என சொல்லிக் கொண்டிருக்கிறார்.



அவர், முதலில் பா.ஜ., விடம் இருந்து, அ.தி.மு.க.,வை மீட்டெடுக்கும் வேலையை பார்க்க வேண்டும். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியை வீழ்த்துவதற்கான போரில், தி.மு.க., இளைஞர் அணி முன் வரிசையில் நிற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement