ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் சதம்; இந்தியா - இங்கி., 4வது டெஸ்ட் போட்டி டிரா

மான்செஸ்டர்: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக ஆடி சதம் அடித்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் கிரிக்கெட் மான்செஸ்டரில் உள்ள மைதானத்தில் கடந்த 23ம் தேதி தொடங்கியது. முதல் இன்னிங்சில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து அணி 669 ரன்களும் எடுத்தது.
311 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு, ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த கேப்டன் கில் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்தனர். நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. கில் (78), ராகுல் (87) அவுட்டாகாமல் இருந்தனர்.
தொடர்ந்து, 5ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கே.எல்.ராகுல் 90 ரன்கள் எடுத்த போது, ஸ்டோக்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ., முறையில் அவுட்டானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கில் 103 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணை, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
வேண்டாம்... விளையாடலாம்
இருவரும் சதத்தை நோக்கி நெருங்கினர். அப்போது, 15 ஒவர்கள் எஞ்சியிருந்த நிலையில், போட்டியை முன்கூட்டியே முடித்துக் கொள்ள இந்திய வீரர்களிடம் இங்கி., கேப்டன் ஸ்டோக்ஸ் கேட்டுள்ளார். ஆனால், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா இருவரும் சதம் அடிக்கும் வாய்ப்பு இருந்ததால், அதனை இந்தியா நிராகரித்தது. அதன்பிறகு, ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதம் அடித்தனர். இது வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சதமாகும். அதன்பிறகு, போட்டி முன்கூட்டியே முடித்துக் கொள்ள இரு அணிகளும் சம்மதித்தன. இதனால், 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.
2வது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 425 ரன்கள் குவித்திருந்தது. ஜடேஜா (107), வாஷிங்டன் சுந்தர் (101) ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 203 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்த ஆட்டம் சமனில் முடிந்தாலும், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி பின்னிலையில் உள்ளது.
'கில்'லின் சாதனைகள்
இந்தத் தொடரில் கேப்டன் கில் 700 ரன்களை கடந்துள்ளார். இதன்மூலம், இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களுக்கு அதிகமாக விளாசிய முதல் இந்திய வீரர் மற்றும் கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக இந்திய வீரர்கள் யாரும் இந்த சாதனையை படைத்ததில்லை.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் வெஸ்ட் இண்டீஸில் ஒரு டெஸ்ட் தொடரில் 774 ரன்கள் குவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, ஒரு டெஸ்ட் தொடரில் சுனில் கவாஸ்கர் 732 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், பல ஜாம்பவான்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்தார். இங்கிலாந்தில் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த ஆசிய வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார். முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் (631), டிராவிட் (602), கோலி (593) ஆகியோர் இந்தப்பட்டியலில் உள்ளனர்.
இந்தத் தொடரில் அவர் அடிக்கும் 4வது சதம் இதுவாகும். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள் கவாஸ்கர் (4), கோலி (4) ஆகியோரின் சாதனையை சமன் செய்தார்.
அதேபோல, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடித்த கேப்டன்களான சுனில் கவாஸ்கர் (4), டான் பிராட்மேன் (4) ஆகியோரின் சாதனையையும் கில் சமன் செய்துள்ளார்.
மேலும்
-
கோவளம் சதுப்பு நிலத்தில் 1,000 மரக்கன்றுகள் நடவு
-
'சிசிடிவி' சேதம் குற்றங்கள் கண்டறிவதில் சிக்கல்
-
'சிசிடிவி' கேமராவை சீரமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
-
காமாட்சி அம்மனுக்கு 1,008 கலச அபிஷேகம்
-
பல்லாவரம் மேம்பாலம் கீழ் பகுதி சுத்தம் செய்து பூங்கா அமைக்கப்படுமா?
-
விவசாயத்தை காப்போம் விழிப்புணர்வு மாரத்தான்