நாய்களை கருணை கொலை செய்ய அரசாணையா? அதிகாரிகள் விளக்கம்

1

சென்னை: 'நோய்வாய்பட்ட நாய்களை கருணை கொலை செய்வது தொடர்பாக, தமிழக கால்நடை துறை சார்பில், புதிதாக அரசாணை எதுவும் வெளியிடப்படவில்லை; ஏற்கனவே நடைமுறையில் உள்ளது தான் அது' என, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் நோய்வாய்ப்பட்ட நாய்களை கருணை கொலை செய்ய, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால், அப்படி எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த 2023ல், ஏ.பி.சி., திட்டம் என்ற பெயரில் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

இத்திட்டத்தின் கீழ், நாய்கள் பிடிக்கப்பட்டு, அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் விடப்படும். இதை, பிராணிகள் நல வாரியம் கண்காணிக்கிறது.

அதேபோல, கேன்சர் போன்ற தீராத நோய்வாய்ப்பட்ட நாய்களை, கால்கள் உடைந்து வாழ சிரமப்படும் நிலையில் உள்ள நாய்களை கருணை கொலை செய்யலாம். அதற்கென ஒரு கமிட்டி உள்ளது.

அவர்கள் அந்த நாயை நேரில் பார்த்து பரிசோதித்த பின், அவர்களின் அறிவுரையின் படி, தகுதியுள்ள கால்நடை மருத்துவர், அந்த நாயை கருணை கொலை செய்யலாம். இதுவும், 2023 முதல் நடைமுறையில் உள்ளது.

ஆனால், துன்புறுத்தி கொல்லக்கூடாது. அதற்கென சில விதிமுறைகள் உள்ளன. 'அனஸ்தீசியா' எனப்படும் மயக்க மருந்தை அதிகமாக கொடுத்து, இதயத் துடிப்பை செயலிழக்கச் செய்வர்.

இது நடைமுறையில் உள்ளதே. தமிழகத்தை பொறுத்தவரை, இது குறித்து புதிதாக எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

@block_B@

நடைமுறை என்ன?

நோய்வாய்ப்பட்ட நாய் குறித்த விபரத்தை, முதலில் அப்பகுதியில் உள்ள அரசு கால்நடை மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும். அவர் நாயை காப்பாற்ற முடியாத நிலை இருந்தால், சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து, மாவட்ட கால்நடை துறை மண்டல இணை இயக்குநர், உதவி இயக்குநர், அப்பகுதியில் உள்ள பிராணிகள் நல வாரிய அலுவலர் ஆகியோர் அடங்கிய கமிட்டிக்கு தகவல் அளிப்பார். அவர்கள் நாயின் நிலை குறித்து ஆராய்ந்து, அனுமதி அளித்த பின், பதிவு பெற்ற கால்நடை மருத்துவர் மட்டுமே கருணை கொலை செய்ய முடியும். தனி மனிதர் யாரும் நாயை கொலை செய்ய அனுமதி இல்லை; அப்படி செய்வது சட்டப்படி குற்றம். புதிய கொள்கை தமிழகத்தில் சாலைகளில் விலங்குகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்துவது தொடர்பாக, தமிழக அரசு புதிய கொள்கை ஒன்றை வெளியிட திட்டமிட்டது. தற்போது கொள்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதை முதல்வர் வெளியிடுவார் என கால்நடை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.block_B

Advertisement