குடியிருப்புக்கு நடுவே குடிநீர் தொட்டி; தீர்மானம் நிறைவேற்றியும் தாமதம் ஏனோ புலம்பும் மக்கள்

விருதுநகர் : விருதுநகர் நகராட்சி 33வது வார்டு கட்டையாபுரத்தில் குடியிருப்பு நடுவே உள்ள குடிநீர் தொட்டியால் அப்பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதை இடிக்க நகராட்சியில் இருந்து தீர்மானம் அனுப்பியும் குடிநீர் வடிகால் வாரியம் தாமதித்து வருகிறது.

விருதுநகர் நகராட்சி 33வது வார்டு கட்டையாபுரம் ராமசாமி தெருவில் 2004ம் ஆண்டில் 50 ஆயிரம் லிட்டர் குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. அப்போதைய நகரமைப்புக்கு அது தேவையாக இருந்தாலும், 10 ஆண்டுகளிலே தெரு உருவாகி குடியிருப்புகள் பெருக துவங்கி விட்டன. தற்போது 2024 ல் அப்பகுதியில் குடியிருப்புகள் அதிகரித்து மக்கள் இந்த தெருவை போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் டூவீலரை தவிர வேறு வாகனங்கள் செல்ல முடியாது.

இதனால் அவசரத்திற்கு கூட ஆம்புலன்ஸ் வெளிவர முடிவதில்லை. இந்த வார்டின் கவுன்சிலர் மைக்கேல் ராஜ், நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். இதற்கு பிறகு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இது நகராட்சி மூலம் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு அனுப்பப்பட்டும் தற்போது வரை இடிக்கப்படாமல் உள்ளது. 4 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்பாட்டில் இல்லை. கல்லுாரி ரோடு குடிநீர் தொட்டியில் இருந்து தான் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வருகிறது.

குடிநீர் தொட்டி இடிக்கப்படாமல் உள்ளதால் அப்பகுதி மக்கள் அவசரம் உள்ளிட்ட ஆம்புலன்ஸ் வசதிகளுக்கு அல்லாடி வருகின்றனர். ஆட்டோ கூட உள்ளே வர முடியாது. முதியவர்கள் பாடு கடும் சிரமமாக தான் உள்ளது. தற்போது குடியிருப்புகள் தொட்டியை யொட்டி பெருகி உள்ளதால் இடிக்கும் போது கூட அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வித சேதமும் ஏற்படாத வகையில் இடிக்க தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

Advertisement