மெல்ல கற்கும் மாணவர்களுக்கு திறன் பயிற்சி ஆய்வு கூட்டம்

ராமநாதபுரம் : அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 ம் வகுப்பு வரை மெல்ல கற்கும் மாணவர்களுக்கான திறன் பயிற்சி கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணை இயக்குநர் குமார் தலைமை வகித்தார். முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் வெள்ளதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த வழிகாட்டி ஆய்வு கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களின் வட்டார கல்வி அலுவலர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9 ம் வகுப்பு வரை மெல்ல கற்கும் மாணவர்களுக்கான திறன் பயிற்சியை அப்பள்ளி ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்கின்றனர்.

அதை அப்பள்ளியின் தலைமையாசிரியர் எவ்வாறு கண்காணிக்கிறார். திறன் பயிற்சி கூட்டத்தை பயன்படுத்தி ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்கின்றனர். மாணவர்கள் எவ்வாறு அதனை புரிந்து கொண்டு தங்கள் கற்றல் திறனை மேம்படுத்துகின்றனர்.

இது போன்றவற்றை ஆய்வு செய்து அதன் அறிக்கையை அடுத்த கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் குமார் தெரிவித்தார்.முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பேசியதாவது:

வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும் போது மாணவர்களின் வருகை பதிவு, நீண்டநாள் பள்ளிக்கு வராத மாணவர்கை பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கை, மாணவர்களுக்கான அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் அனைத்து மாணவர்களுக்கும் சென்றடைந்த விபரம் போன்றவற்றிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.

ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவித்திட்ட அலுவலர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement