வைகையில் நீரினை திறக்க கால்நடை வளர்ப்போர் கோரிக்கை

திருப்புவனம் : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடை வளர்க்கப்படுகிறது. திருப்புவனம் தாலுகாவில் கீழடி, கொந்தகை, அல்லிநகரம், பழையனூர், பூவந்தி, மடப்புரம், மணல்மேடு, பெத்தானேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, கறவை மாடு அதிகளவில் வளர்க்கப்படுகின்றன.

திருப்புவனம் வட்டாரத்தில் 533 எருமை மாடுகளும், 20 ஆயிரத்து 615 செம்மறியாடுகளும், 21 ஆயிரத்து 370 வெள்ளாடுகளும் உள்ளன. கால்நடை வளர்ப்பவர்கள் பலரும் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

கண்மாயை ஒட்டிய பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றால் உணவு, தண்ணீர் பிரச்னை இருக்காது. எனவே கண்மாயை ஒட்டிய பகுதிகளில்தான் பெரும்பாலும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள்.

பெரும்பாலான கண்மாய்களில் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கிறது. ஒருசில கண்மாய்களில் உள்ள தண்ணீரும் கால்நடைகள் குடிக்க கூட பயனற்றதாக உள்ளது. கிணற்று பாசன விவசாயிகளும் பல இடங்களில் சொட்டு நீர்ப்பாசனம், குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சுதல் என சிக்கன நடவடிக்கையில் இறங்கியதால் கால்நடை களுக்கு தண்ணீர் கிடைப் பதில்லை.

கண்மாய்களில் தண்ணீர் இருந்தால் வாய்க்கால் மூலம்தான் பாய்ச்சுவார்கள். இதன் மூலம் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும், செப்.,ல் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ள நிலையில் தற்போது வைகை அணையில் 66.27 அடி தண்ணீர் இருப்பு இருப்பதாலும் சிவகங்கை மாவட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement