முடிவுக்கு வந்தது எல்லை மோதல்; தாய்லாந்து- கம்போடியா போர் நிறுத்தம் அமல்

4


சுரின்: பல நாட்கள் நீடித்த எல்லை மோதல்களுக்குப் பிறகு, தாய்லாந்து, கம்போடியா உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.


தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே, நீண்ட காலமாக எல்லை பிரச்னை இருந்து வருகிறது. இது கடந்த ஜூலை 24ல் மோதலாக வெடித்தது. அப்போது எல்லையில் கண்ணி வெடியில் சிக்கி தாய்லாந்து வீரர்கள் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து கம்போடியா மீது ஏவுகணைகளை வீசியது தாய்லாந்து. பதிலுக்கு
கம்போடியாவும் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.


இந்த பிரச்னைக்கு முக்கிய காரணமான பிரசாத் தா முயன் தோம் கோவில் மீது, பிஎம் -21 ரக ராக்கெட்டுகளை ஏவியதாக தாய்லாந்து கூறியுள்ளது. ஹிந்து - புத்த கோவிலான இதை இரு நாடுகளும் உரிமை கோருகின்றன.


மறுபுறம் நீண்ட துார இலக்குகளை குறிவைக்கும் பீரங்கிகளை பயன் படுத்தி தங்கள் நாட்டு எல்லைக்குள் ஏவுகணைகளை தாய்லாந்து ஏவியதாக கம்போடியா கூறியது.
இதற்கிடையே தாய்லாந்து கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தங்களுக்கு சம்மதம் தெரிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.



போர் நிறுத்தம் அமல்

இந்நிலையில், சண்டையை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக இரு நாட்டு தலைவர்களும் இன்று மலேஷியாவில் சந்தித்து பேச்சு நடத்தினர். பின்னர், தாய்லாந்தும், கம்போடியாவும் தங்கள் பல நாட்களாக நீடித்த எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். மலேசியா மத்தியஸ்தம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

Advertisement