கண் அசந்த பஸ் டிரைவரால் கன்வார் யாத்ரீகர்கள் 5 பேர் பலி

ராஞ்சி: ஜார்க்கண்டில் தனியார் பேருந்து ஓட்டுநர் துாங்கியதால், எதிரே வந்த லாரி மீது மோதிய விபத்தில், டிரைவர் மற்றும் பேருந்தில் பயணித்த ஐந்து கன்வார் யாத்ரீகர்கள் பலியாகினர்.

கங்கை நதியில் இருந்து புனித நீரை சொந்த ஊருக்கு எடுத்து வருவது கன்வார் யாத்திரை எனப்படுகிறது. இந்த புனித நீரை வைத்து, தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவிலில் அபிஷேகம் செய்வதை வட மாநில மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பீஹாரைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் தனியார் பேருந்தை வாடகைக்கு எடுத்து, சமீபத்தில் கன்வார் யாத்திரை புறப்பட்டனர்.

இவர்கள் நேற்று அதிகாலை ஜார்க்கண்டின் தியோகரிலிருந்து அருகில் உள்ள பாபா வைத்தியநாத் கோவிலுக்கு சென்றனர். ஜமுனியா காட்டுப்பகுதியில் பேருந்து சென்ற போது, எதிரே சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் மற்றும் கன்வார் யாத்திரைக்கு வந்த பக்தர்கள் என ஆறு பேர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் எட்டு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து குறித்து நடந்த முதற்கட்ட விசாரணையில், டிரைவர் ஓய்வில்லாமல் பஸ்சை இயக்கியதால், ஒரு கட்டத்தில் துாங்கியதாக பஸ்சில் இருந்த பயணியர் சிலர் கூறினர்.

Advertisement