இன்றைய முடிவு நாளைய ஆபத்து: பாலஸ்தீனம் தனிநாடு விவகாரத்தில் பிரிட்டனுக்கு இஸ்ரேல் கண்டனம்

ஜெரூசலம்; பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது.
குண்டுகள் வீசப்படும் சத்தங்கள் இன்னமும் அங்கு கேட்டுக் கொண்டு இருக்கும் சூழலில், தங்களின் நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக, நிபந்தனைகளை ஏற்காவிட்டால், செப்டம்பரில் நடக்க உள்ள ஐ.நா. கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரிட்டன் அங்கீகரிக்கும் என்று அறிவித்துள்ளது.
பிரிட்டனின் இந்த செயலுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து அவர் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளதாவது;
உங்களின்(பிரிட்டன்) இந்த முடிவு பிற்காலத்தில் உங்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.
இதன் மூலம் ஹமாசின் கொடூர செயல்களுக்கு வெகுமதி அளித்து, பாதிக்கப்பட்டவர்களை தண்டிக்கிறார்.
இவ்வாறு நெதன்யாகு கூறியுள்ளார்.
தற்போதுள்ள சூழலில், இந்தியா உள்ளிட்ட 140 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.



























