எலக்ட்ரிக் பைக் பேட்டரி சரி செய்யாத மோட்டார்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க உத்தரவு

புதுச்சேரி:எலக்ட்ரிக் பைக்கில் இயங்காத பேட்டரியை சரிசெய்து தராத மோட்டார்ஸ் நிறுவனத்தினருக்கு, மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு ஆணையம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி, வில்லியனுார் திருகாமேஷ்வரர் நகரை சேர்ந்தவர் சரண்ராஜ் மனைவி கனகதுர்கா. இவர், 2020ம் ஆண்டு ஹீரோ எலக்ட்ரிக் பைக் கம்பெனியின் விற்பனை ஏஜென்டான வில்லியனுார் மோட்டார்ஸ் நிறுவனத்திலிருந்து ரூ. 72 ஆயிரத்து 730க்கு எலக்ட்ரிக் பைக் வாங்கியுள்ளார்.

அதில், பேட்டரி சரியாக செயல்படாததால், வில்லியனுார் மோட்டார்ஸ் சர்வீஸ் சென்டரில் விட்டபோது, 60 நாட்கள் வாகனத்தை சரியான இடத்தில் வைத்து பாதுகாப்பு அளிக்காததால், பேட்டரி முழுமையாக வீணாகியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலக்ட்ரிக் பைக் நிறுவனம் உத்தரவாத காலம் முடிந்துவிட்டதால் பேட்டரியை மாற்றிதர மறுத்துள்ளனர்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கனகதுர்கா, புதுச்சேரி நுகர்வார் குறைதீர்வு ஆணையத்தில், இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். ஆணைய தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவேதா, ஆறுமுகம் ஆகியோர் விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பளித்தனர். அதில், பைக் வாகனத்திற்கு பொருத்தமான புதிய பேட்டரியை மாற்றி தர வேண்டும். கோரிக்கைகளை உரிய நேரத்தில் பரிசீலிக்காமல் சேவை குறைப்பாடு புரிந்துள்ளதால், ரூ.30 ஆயிரம் இழுப்பீடு, வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.

Advertisement