3 நாட்கள் தொடர் விடுமுறை அவசியமாகிறது சிறப்பு ரயில்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஆக.15, 16, 17 ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வரவும், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்பி செல்லவும் ரயில்களில் வெயிட்டிங் நிலை காணப்படுவதால் சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை சேர்ந்த பல லட்சம் மக்கள் சென்னையில் வசிக்கின்றனர். இவர்கள் வார விடுமுறை, தொடர் விடுமுறை, பண்டிகை விடுமுறை நாட்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல போதுமான ரயில்கள் இல்லை.

ஆக.15, 16, 17 தொடர் விடுமுறை வருவதால் 60 நாட்களுக்கு முன்பே பலர் முன்பதிவு செய்துள்ளனர். மதுரை தேஜஸ், நாகர்கோவில் வந்தே பாரத் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலையும், குருவாயூர், வைகை, திருச்செந்தூர், கன்னியாகுமரி, கொல்லம், முத்து நகர், அனந்தபுரி, பொதிகை, நெல்லை, பாண்டியன், சிலம்பு ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாத 'ரிக்ரட்' நிலையும் எட்டியுள்ளது.

ஆக.17, 18, 19 தேதிகளில் சென்னை செல்லும் ரயில்களில் வெயிட்டிங் லிஸ்ட் நிலை உள்ளது. இதிலும் பல ரயில்களில் முன்பதிவு செய்யப்பட முடியாத நிலை உள்ளது.

எனவே, ஆக. 14 அன்று சென்னையில் இருந்து மதுரை, செங்கோட்டை, நாகர்கோவில் நகரங்களுக்கும், ஆக. 17 அன்று சென்னைக்கும் சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement