புதிய பயிற்சியாளர் ஜமில் * இந்திய கால்பந்து அணிக்கு...

புதுடில்லி: இந்திய கால்பந்து அணி புதிய பயிற்சியாளராக 13 ஆண்டுக்குப் பின் இந்தியாவின் காலித் ஜமில் நியமிக்கப்பட்டார்.
இந்திய கால்பந்து, கோவா ஐ.எஸ்.எல்., என இரு அணிக்கும் ஸ்பெயினின் மனோலோ மார்கஸ் 56, பயிற்சியாளராக இருந்தார். இந்திய அணி தொடர்ந்து ஏமாற்றியதால், தாமாக முன்வந்து பதவி விலகினார் மார்கஸ்.
புதிய பயிற்சியாளரை தேட, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், முன்னாள் ஜாம்பவான் விஜயன் தலைமையில் தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டது. 170 பேர் விண்ணப்பித்தனர். இந்தியாவின் காலித் ஜமில், முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து), டார்கோவிச் (சுலோவாகியா) என மூன்று பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.
முடிவில் இந்திய அணி முன்னாள் வீரர் காலித் ஜமால் புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். 13 ஆண்டுக்குப் பின் இந்தியாவை சேர்ந்த காலித் 48, பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன் கடந்த 2011-12ல் சவியோ மெடெய்ரா பதவியில் இருந்தார்.
இவரது பயிற்சியில் 'ஐ-லீக்' தொடரில் (2017) அய்சவால் அணி அணி கோப்பை வென்றது. தற்போது ஐ.எஸ்.எல்., தொடரில் ஜாம்ஷெட்பூர் அணி பயிற்சியாளராக உள்ளார்.
ஆகஸ்ட் 29ல் துவங்கும் மத்திய ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் 'நேஷன்ஸ் கோப்பை' தொடரில் இருந்து, இவரது பயிற்சி துவங்குகிறது.
இந்தியாவுக்கு மட்டும்...
ஏ.ஐ.எப்.எப்., தலைவர் கல்யாண் சவுபே கூறுகையில்,'' காலித் ஜமில் மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க விரும்புகிறார். இதுகுறித்து செயல்பாடு அடிப்படையில் முடிவு செய்யப்படும். இந்திய அணிக்கு மட்டும் இவர் பயிற்சியாளராக இருப்பார்,'' என்றார்.

Advertisement