விகாஸ் குமார் விகாஸ் ஐ.பி.எஸ்., சஸ்பெண்ட் உத்தரவும் ரத்து

ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், ஐ.பி.எஸ்., அதிகாரி விகாஸ் குமார் விகாஸ் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்த செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்ததைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பெங்களூரில் நடந்த ஆர்.சி.பி., வெற்றி விழா கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட ஐந்து போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த சஸ்பெண்டை எதிர்த்து, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரி விகாஸ் குமார் விகாஸ் முறையிட்டார். விசாரணை நடத்திய தீர்ப்பாயம், மாநில அரசின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், அரசு மேல்முறையீடு செய்தது.

இதற்கிடையில், விகாஸ் குமார் விகாஸ் தவிர மற்ற போலீசாரின் சஸ்பெண்ட் உத்தரவை அரசு வாபஸ் பெற்றது. அத்துடன் அவர்களுக்கு பணியும் வழங்கியது. விகாஸ் குமார் விகாஸ் விவகாரம் உயர் நீதிமன்றத்தில் இருந்ததால், அரசு தலையிட விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று நீதிபதிகள் பண்டித், நடாப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிகாரி மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் நேற்றே பணியில் சேர்ந்துவிட்டதாகவும் நீதிபதிகளின் கவனத்துக்கு அரசு வழக்கறிஞர் கொண்டு வந்தார்.


இதையடுத்து, அரசு மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

- நமது நிருபர் -.

Advertisement