தலைமை பண்பு இல்லாமல் நடிகர்களால் நிலைக்க முடியாது; விஜயை விமர்சிக்கும் திருமாவளவன்

27

சென்னை : சென்னையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாணவரணி சார்பில் நடந்த, 'மதச்சார்பின்மை காப்போம்' கருத்தரங்கில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:


நாம் பேசுவது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் பொறுப்பை உணர்ந்து பேசுவதே தலைமைப் பண்பு. துாண்டி விட்டு விட்டு, போய் விடலாம்; அது ஜாதி கலவரமாக மாறலாம்; துப்பாக்கிச்சூடு வரை செல்லக்கூடும். அந்த பாதிப்புகள் யாருக்கும் நேர்ந்துவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வு தேவை.


தலைமைப் பண்பு சும்மா வந்துவிடாது. அரசியல் ஆதாயம் கிடைத்தால் போதும், யார் எக்கேடு கெ ட்டால் என்ன என, நினைக்கக் கூடாது. பிரபல நடிகர்கள் அரசியலுக்கு வந்தால், சில காலம் ஈர்ப்பு இருக்கும். ஆனால், தலைமை பண்பு இல்லாவிட்டால், அந்த ஈர்ப்பை தக்க வைக்க முடியாது; நிலைக்க முடியாது.


ஆவேசமாக கை, கால்களை உயர்த்தி, உதறி, உணர்ச்சிகரமாக பேசும் பேச்சாளர்கள் இருக்கலாம். அவர்களுக்கும் கூட பொறுப்புணர்வு இல்லாவிட்டால், தற்காலிகமாகவே நீடிக்க முடியும். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி என்பது வெறும் கூட்டணி மட்டுமல்ல, பா.ஜ.,வின் கருத்தியலுக்கு அ.தி.மு.க., உட்பட்டு இருக்கிறது. அதைத்தான் நாம் சுட்டிக்காட்டுகிறேம்.

இவ்வாறு அவர் பேசினார்.


இதையடுத்து, எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கக் கோரியும், அம்பேத்கர் அயலக உயர் படிப்பு உதவித்தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நிதி வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Advertisement