சர்ச்சை போஸ்டர்கள்; இரவோடு இரவாக அகற்றிய குஜராத் போலீஸ்!

1

ஆமதாபாத்: 'பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், பெண்கள் வீடுகளுக்குள்ளே இருக்க வேண்டும்' என்று குஜராத் போலீசார் ஒட்டிய போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவை அகற்றப்பட்டன.



குஜராத் மாநிலத்தில் உள்ள சோலா, சந்தோலிடியா உள்ளிட்ட நகரங்களில் போக்குவரத்து போலீசார் தரப்பில் பல போஸ்டர்கள் அங்குள்ள சுவர்களில் ஒட்டப்பட்டு உள்ளன. அதில் நள்ளிரவு விருந்துகளில் பங்கேற்காதீர்கள், நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படலாம் அல்லது கூட்டு பாலியலுக்கு ஆளாகலாம்.


உங்கள் நண்பருடன் இருண்ட, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாதீர்கள். அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாலோ அல்லது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானால் என்ன செய்வது? என்ற வாசகங்கள் அந்த போஸ்டர்களில் காணப்பட்டன.


அரசு நிர்வாகம் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கு பதிலாக இதுபோன்ற பிற்போக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக விமர்சனங்கள் எழுந்தன. எதிர்க் கட்சிகளும் தொடர்ந்து இதே விமர்சனத்தை முன் வைக்க, அந்த போஸ்டர்கள் அகற்றப்பட்டன.


போலீசார் கூறியதாவது:


அரசு சாரா நிறுவனம் ஒன்று எங்களை அணுகி, கல்வி நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய விரும்புவதாகவும் கூறி போஸ்டர்களை காட்டினர்.


ஆனால் இதுபோன்ற சர்ச்சைக்குரிய போஸ்டர்களை அவர்கள் எங்களுக்கு காட்டவில்லை, எங்கள் அனுமதியின்றி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. எங்கள் கவனத்துக்கு வந்தவுடன் அவை அகற்றப்பட்டு விட்டன என்று குஜராத் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.


போஸ்டர்கள் குறித்து அறிக்கை ஒன்றின் மூலம் விமர்சித்துள்ள குஜராத் மாநில ஆம் ஆத்மி, பெண்கள் பாதுகாப்பு பற்றி பாஜ மற்றும் மாநில முதல்வர் பேசுகின்றனர். ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக நிலைமை முற்றிலும் மாறாக இருக்கிறது. 6500 பாலியல் வன்கொடுமைகள், 36க்கும் அதிகமான கூட்டு பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன என்று தெரிவித்துள்ளது.

Advertisement