அஜித்குமார் கொலை வழக்கில் அப்ரூவர் ஆகிறாரா வேன் டிரைவர்

திருப்புவனம்,:மடப்புரம் கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் கொலை வழக்கில் போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் அப்ரூவராக மாற உள்ளார் என தெரியவந்துள்ளது.

ஜூன் 28 ல் மடப்புரம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தரின் தங்க நகை திருடு போன வழக்கில் மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தார். இது தொடர்பாக ஜூலை 12 முதல் சி.பி.ஐ., விசாரணை நடந்து வருகிறது.

அஜித்குமார் கொலை சம்பந்தமாக திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை போலீசார் கண்ணன், ராஜா, பிரபு, சங்கரமணிகண்டன், ஆனந்த் ஆகிய ஐந்து போலீசாரை கைது செய்து மதுரை சிறையில் அடைத்துள்ளனர். மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம், குற்றப்பிரிவு போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சி.பி.ஐ., விசாரணையின் போது ஜூன் 27 மற்றும் 28ம் தேதி அஜித்குமாரை எந்த எந்த இடத்திற்கு யார், யார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர் என்பது குறித்து டிரைவர் ராமச்சந்திரன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் போலீஸ் வேனில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்து சென்று காட்டினார். இந்த வழக்கில் ராமச்சந்திரன் சாட்சியம் முக்கியமாக இருப்பதால் அவர் அப்ரூவராக மாற உள்ளார் என தெரிகிறது.

அஜித்குமாரை விசாரணையின் போது ராமச்சந்திரன் வேனில் அழைத்துச் சென்றார் என்பதாலும், தாக்கிய சம்பவத்தில் தொடர்பு இல்லை என்பதாலும் அவர் கைது செய்யப்படாமல் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

Advertisement