காரீப் பருவ பயிர் காப்பீடு செய்ய 14-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற் பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 14 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சத்தியமூர்த்தி செய்திக்குறிப்பு :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு காரீப் பருவத்தில் சொர்ணவாரி நெல் மற்றும் கம்பு பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு கடந்த ஜூலை 31 வரை அவகாசம் இருந்தது. தற்போது மேலும் பல விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயனடையும் விதத்தில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி காரீப் பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிக்கு நெற் பயிருக்கு வரும் 14ம் தேதி வரையும், கம்பு பயிருக்கு வரும் 16ம் தேதி வரையும் காப்பீடு செய்ய கடைசி நாள் ஆகும்.நெற்பயிருக்கு எக்கருக்கு ரூ.463 மற்றும் கம்பு பயிருக்கு ரூ.237 பிரீமிய கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனை பொது சேவை மையங்கள். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தலாம். காப்பீடு செய்வதற்கு நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவை தேவையான ஆவணங்கள் ஆகும்.

பதிவு செய்யும்போது விவசாயிகள் பெயர், முகவரி, நிலப்பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிடப்பட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை சரியாக கவனித்து பதிவு செய்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement