கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து புத்தொழில் துவங்க விரும்பினால் உதவி தமிழக அரசின் 'நெக்ஸ்ட் லீப்' திட்டம் 

சென்னைதமிழகத்தில் பெரிய நிறுவனங்களில் பணிபுரிவோரில், தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள், புத்தொழில் துவங்குவதற்கு முறையான வழிகாட்டு உதவிகளை வழங்க, 'நெக்ஸ்ட் லீப்' திட்டத்தை செயல்படுத்துவதற்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் படித்த இளைஞர்களை தொழில்முனைவோராக்க அரசு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி தற்போது, பெரிய நிறுவனங்களில் பணியாற்றும் நபர்களில், புத்தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்கள், தொழில் துவங்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க, 'நெக்ஸ்ட் லீப்' திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தில், தொழில் துவங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு முறையான வழிகாட்டுதல், தொடர்பு, உத்தி போன்ற புத்தொழில் துவங்குவதற்கான ஆதரவுகள் முழுவதுமாக அளிக்கப்படும்.

இத்திட்டத்தை, தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம், ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவு மேம்பாடு சார்ந்து செயல்படும் தொழில் துறை அமைப்புகளுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. முதலீட்டாளர்கள் சந்திப்பு, நிதி உதவிகளை, ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் வழங்கும்.

ஒரு குழுவுக்கு, 10 பேர் வீதம், 10 குழுக்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 பேர் தேர்வு செய்யப்பட்டு, தொழில் துவங்க உதவப்படும். இதற்கு ஒரு குழுவுக்கு, 10 லட்சம் ரூபாய் என, மொத்தம், 1 கோடி ரூபாயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

@block_B@ தேவையான தகுதிகள்  தொழில் துவங்க ஆர்வம் உள்ள நபர், நிறுவன சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்திருக்க வேண்டும்.  குறைந்தது, ஐந்து ஆண்டுகள் தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  முழு நேர வேலையில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்.  'லீடர்ஷிப்' எனப்படும் ஒரு குழுவை தலைமை தாங்கி நடத்தியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.  திட்டத்தின் சலுகைகளை பெறும் முன் விண்ணப்பதாரர், ஒரு சட்டப்பூர்வ நிறுவனத்தை பதிவு செய்திருக்க வேண்டும்.block_B

Advertisement