கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் நியாயமற்றது என மத்திய அரசு பதிலடி டிரம்புக்கு இந்தியா பதிலடி

புதுடில்லி, ஆக.5-

ரஷ்யாவுடன் தொடர்ந்து அமெரிக்கா வர்த்தகம் செய்து வரும் நிலையில், இந்தியாவை நிறுத்தச் சொல்வது நியாயமற்றது என அமெரிக்க அதிபர் டிரம்புக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.

இந்தியாவை குறி வைத்து அமெரிக்கா செயல்படுவது நியாயமற்றது, காரணமற்றது என்று வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்துஉள்ளது.

முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கான வரியை கணிசமாக அதிகரிப்பேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்தார்.

தனது சமூக வலைதளத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவு:

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதோடு மட்டுமல்லாது, அதை வெளிச்சந்தையில் விற்று, இந்தியா அதிக லாபம் அடைந்து வருகிறது.

உக்ரைனில் ரஷ்யா நடத்தும் தாக்குதலில் எவ்வளவு பேர் கொல்லப்படுகின்றனர் என்பது பற்றி அதற்கு கவலையில்லை. இதன் காரணமாக, அமெரிக்காவில் இந்திய பொருட்கள் இறக்குமதிக்கு, கணிசமாக வரியை தொடர்ந்து அதிகரிப்பேன்.

இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக கடந்த வாரத்தில் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு, வரும் 7 ம் தேதி அமலுக்கு வரவுள்ளது. இந்நிலையில், வரியை மேலும் அதிகரிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இந்நிலையில், டிரம்ப்புக்கு பதில் அளிக்கும் வகையில், 'நாட்டின் நலனை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்' என மத்திய அரசு நேற்றிரவு அறிக்கை வெளியிட்டது.

Advertisement