பக்தர்கள் ஏமாற வேண்டாம்: திருச்செந்துாரில் அறிவிப்பு

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஜூலை 7ல் கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது மண்டல பூஜை நடந்து வருகிறது. இதனால், பக்தர்களின் கூட்டம் அதிகளவு காணப்படுகிறது.
இந்நிலையில், பணம் பெற்று, பக்தர்களை கோவிலுக்குள் அழைத்து சென்றதாக, சமீபத்தில் இரண்டு அர்ச்சகர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
இருப்பினும், 'பணம் கொடுத்தால் விரைவாக சுவாமி தரிசனம் செய்யலாம்' என, சிலர் தொடர்ந்து பக்தர்களிடம், வசூலில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில், ராஜகோபுரம் அருகே வைக்கப்பட்டுள்ள பதாகையில் கூறியிருப்பதாவது:
கோவிலில் பக்தர்களை அழைத்து சென்று தரிசனம் செய்ய வைப்பதாக ஏமாற்றி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடும் நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். பணம் கேட்போர் மீது கோவில் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கவும். இவ்வாறு கூறப்பட்டுஉள்ளது.
