குளக்கரையில் மரங்கள் துண்டிப்பு; சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

கோவை; உக்கடம் வாலாங்குளக்கரை நடைபாதையில் இருந்த இரண்டுமரங்கள் வெட்டப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், கோவையின் பல்வேறு குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதில், உக்கடம் வாலாங்குளத்தை சுற்றி நடைபாதையுடன், மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு காலை, மாலை நேரங்களில் முதியோர், குழந்தைகள் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். குளக்கரையை சுற்றிலும், 60க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இந்நிலையில், குளக்கரையின் வடக்கே நடைபாதையில் இருந்த இரண்டு பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரனிடம் கேட்டபோது, ''வாலாங்குளக்கரையில் மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
புத்துயிர் தரணும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் அல்லது பட்டுப்போகும் நிலையிலுள்ள மரங்களை, வேரோடு பெயர்த்து வேறொரு இடத்தில் நட்டு புத்துயிர் பெறச்செய்ய வேண்டும். இந்த பசுமையான மரங்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியம். அவற்றை அழிப்பது ஏற்கத்தக்கது அல்ல' என்றனர்.