ஸ்குவாஷ்: அரையிறுதியில் தான்வி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இந்தியன் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. பெண்கள் ஒற்றையரில் இத்தொடரின் 'நம்பர்-5', உலகத் தரவரிசையில் 126வது இடத்திலுள்ள இந்தியாவின் தான்வி கன்னா, 99 வது இடத்திலுள்ள, இத்தொடரின் 'நம்பர்-2', எகிப்தின் மென்னா வாலித்தை எதிர்கொண்டார்.
இதில் சிறப்பாக செயல்பட்ட தான்வி, 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் 114வது இடத்திலுள்ள மலேசிய வீராங்கனை கோ ஜி ஜுவானை சந்திக்க உள்ளார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அஞ்சலி, மலேசியாவின் கோ ஜி ஜுவானிடம் 1-3 என தோல்வியடைந்தார்.
இந்தியாவின் பூஜா ஆர்த்தி, எகிப்தின் நுார் ககபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சுராஜ் குமார், திவாகர் சிங், ஆர்யவீர், சந்தேஷ் ரிவிகுமார், இரண்டாவது சுற்றில் தோல்வியடைந்தனர்.

Advertisement