12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று, 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில் மிக கனமழைக்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை:



ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில் நேற்று அதிகபட்சமாக, 13 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ராணிப்பேட்டை கலவை பகுதியில், 10; திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதிகளில் தலா, 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும், 13ம் தேதி வரை பல்வேறு பகுதி களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதற்கான, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று கன மழை பெய்யலாம்.

@twitter@https://x.com/dinamalarweb/status/1953630202539782417twitter
தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை மாவட்டங்களில், நாளை கனமழை பெய்ய வாயப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில இடங்களில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement