உலக நாடுகள் மீதான வர்த்தக போரால் தன்னையே அழித்துக்கொள்ளும் டிரம்ப்; எச்சரிக்கும் வல்லுநர்கள்

12

வாஷிங்டன்: உலக நாடுகளுடன் வர்த்தக போரை ஏற்படுத்தியதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று அமெரிக்காவின் பிரபல பொருளதார நிபுணர் ஸ்டீவ் வான்கே எச்சரித்துள்ளார்.



உலகில் கிட்டத்தட்ட 90க்கும் அதிகமான நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய வரிகளை விதித்துள்ளார். இந்தியா மீதும் 50 சதவீதம் வரியையும் விதித்து இருக்கிறார். அமெரிக்காவின் இத்தகைய போக்கு உலக நாடுகளின் பொருளாதார ஸ்திரத்தன்மையை கேள்விக்குறியாக்கி விடும் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இப்படியான சூழலில் உலக நாடுகளுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடவடிக்கைக்கு அந்நாட்டில் இருக்கும் பிரபல பொருளாதார நிபுணர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் பிரபல பொருளாதார நிபுணரும், பேராசிரியருமான ஸ்டீவ் வான்கேவின் விமர்சனம் இந்த விஷயத்தை அடுத்தக்கட்ட விவாதத்திற்கு கொண்டு சென்றுள்ளது.


இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது;


அவரின் (டிரம்ப்) அறிவிப்பு முற்றிலும் தவறானது. தன்னைத் தானே அழித்துக் கொண்டு எதிரியுடன் ஒருபோதும் மோதக்கூடாது என்பது மாவீரன் நெப்போலியனின் அறிவுரை. இந்த விஷயத்தில் டிரம்ப், நெப்போலியனின் ஆலோசனையைத் தான் பின்பற்ற வேண்டும்.


ஆனால், டிரம்ப் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார் என்று நான் நினைக்கிறேன். இந்த விவகாரத்தில் இந்திய பிரதமர் மோடி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் இன்னமும் காத்திருக்க வேண்டும்.


அதற்கு காரணம், டிரம்பின் நடவடிக்கைகள் எல்லாம் நிலைகுலைந்து விடும் என்பது தான். பொருளாதாரத்தை உயர்த்துவற்காக என்ற அவரின் வரிவிதிப்பு முற்றிலும் முட்டாள்தனமானது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement