எதிர்ப்புக்கு பணிந்தது ஐசிஐசிஐ... குறைந்தபட்ச இருப்புத்தொகை மீண்டும் குறைப்பு

9

கோல்கட்டா: கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு, ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஐசிஐசிஐ வங்கி இந்த மாதம் முதல், புதிதாக கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்கள் பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகையை, ஐந்து மடங்கு உயர்த்தியது. நகர்ப்புறங்களுக்கு 10,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும்; சிறிய நகரங்களுக்கு 5,000 ரூபாயிலிருந்து 25,000 ரூபாயாகவும்; கிராமப்புறங்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாகவும் உயர்த்தியது.


இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இந்த விவகாரத்தில் மத்திய நிதி அமைச்சகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.


இந்த நிலையில், ஐசிஐசிஐ வங்கி புதிய சேமிப்பு கணக்கு துவங்கும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச சராசரி இருப்புத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.15 ஆயிரமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த குறைந்தபட்ச இருப்புத்தொகையை விட ரூ.5,000 கூடுதலாகும். முன்பு, ரூ.10,000 ஆயிரமாக இருந்தது.


அதேபோல, சிறிய நகரங்களுக்கு 25,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,000ஆக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களிலும் ரூ.5,000 ரூபாயாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement