ஜார்க்கண்டில் என்கவுன்டர்; ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட முக்கிய நக்சல் தலைவன் சுட்டுக்கொலை

சிங்பும்: ஜார்க்கண்டில் ரூ.2 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு நக்சல் முக்கிய தலைவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.



ஜார்க்கண்ட் மாநிலத்தில் முன் எப்போதும் இல்லாத நக்சல் தடுப்பு வேட்டை வேகம் எடுத்துள்ளது. நக்சல்கள் பதுங்கி இருக்கும் என்று அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டைகளில் இறங்கி வருகின்றனர்.


இந் நிலையில், சிங்பும் மாவட்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.


பாதுகாப்பு படையினர் வருகையை அறிந்த நக்சலைட்டுகள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்புப் படையினரும் திருப்பி தாக்கியதில் இரு தரப்பிலும் சிறிது நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.


இந்த சண்டையில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அவனது பெயர் அருண் (எ) வருண் (அ) நிலேஷ் மட்கம். இவனை பிடித்துக் கொடுத்தால் ரூ.2 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.


துப்பாக்கிச் சண்டையை தொடர்ந்து அங்கு நடைபெற்ற சோதனையில், ஏராளமான துப்பாக்கிகள், 527 தோட்டாக்கள், பிரசார துண்டறிக்கைகள் உள்ளிட்டவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

Advertisement