ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு * இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி

புதுடில்லி: இந்தியாவில் முதன் முறையாக 2010ல் காமன்வெல்த் விளையாட்டு நடந்தது. இதன் 23வது விளையாட்டு, ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் (2026, ஜூலை 23 - ஆக. 2) நடக்க உள்ளது.
அடுத்து 2030ல் ஆமதாபாத்தில் காமன்வெல்த் விளையாட்டு நடத்த இந்தியா ஏற்கனவே, விருப்பம் தெரிவித்து இருந்தது. தற்போது ஆக. 31க்குள் ஏலத்தில் பங்கேற்பது குறித்த திட்டங்களை சமர்பிக்க வேண்டும்.
இதனிடையே நேற்று டில்லியில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஒ.ஏ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில், காமன்வெல்த் ஏலத்தில் பங்கேற்க முறைப்படி அனுமதி வழங்கப்பட்டது.
ஐ.ஒ.ஏ., தலைவர் பி.டி.உஷா கூறியது: காமன்வெல்த் நடத்த ஆமதாபாத் மட்டுமல்ல, டில்லி, புவனேஸ்வரிலும் வாய்ப்பு இருப்பதை தெரிவித்துள்ளோம். 2026ல் பல்வேறு போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. 2030ல் இந்தியாவுக்கு அனுமதி கிடைத்தால், ஹாக்கி, பாட்மின்டன், மல்யுத்தம், துப்பாக்கிசுடுதல் உட்பட நீக்கப்பட்ட அனைத்து விளையாட்டுகளையும் சேர்த்து நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement