திருச்செந்துார் கோவிலில் இரு தரப்பினர் திடீர் மோதல்

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவிலில் ஆவணி திருவிழா கொடி பட்டம் வழங்குவதில் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 12 நாட்கள் திருவிழா நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான 10ம் தேரோட்டம் வரும் 23ம் தேதி காலை 7:00 மணிக்கு நடக்கிறது.

திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, மண்டபத்தில் இருந்து கொடிப்பட்டத்தை வாங்குவதற்காக மூன்றாம் படி செப்பு ஸ்தலத்தார் ஐயப்பன் அய்யர் மற்றும் திரிசுதந்திர ஸ்தலத்தார் சபா, கைங்கர்யா சபா நிர்வாகிகள் காத்திருந்தனர்.

அப்போது, 14 ஊர் செங்குந்தர் உறவின்முறை அபிவிருத்தி சங்க நிர்வாகிகள், கொடி பட்டத்தை மண்டபத்தின் வெளியே வைத்து தருவதாக கூறி, அங்கிருந்து வெளியே வர முயன்றனர். ஸ்தலத்தார் சபை மற்றும் நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், செங்குந்தர் உறவின்முறை சங்கத்தினர் திரிசுதந்திரர்களை மண்டபத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியதால் திரிசுதந்திரர்கள் வெளியேறினர்.

மண்டபத்தில் இருந்து கொடிப்பட்டதை வாங்க மாட்டோம் எனவும், சிவன் கோவிலில் இருந்துதான் கொடி பட்டத்தை வாங்குவோம் எனவும், கோவில் நிர்வாகத்திடம் இருந்துதான் கொடி பட்டத்தை வாங்குவோம் எனக்கூறி அனைவரும் சிவன் கோவிலுக்கு சென்று விட்டனர்.

பின்னர் சிவன் கோவிலில் வைத்து கொடி பட்டத்திற்கு சிறப்பு தீபாரதனை நடந்தது.

கொடிபட்டத்தை ஐயப்பன் அய்யர் கையில் ஏந்தியவாறு யானை மீது அமர்ந்து 8 வீதிகளிலும் உலா வந்து கோவிலுக்கு கொண்டு சென்றார். இதனால் கொடி பட்டம் வீதி உலா ஒரு மணி நேரம் தாமதமானது.

Advertisement