ஆன்லைனில் ரூ.48.59 லட்சம் மோசடி; பண ஆசை காட்டிய வாலிபர் கைது

பாலக்காடு: வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 48.59 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஒற்றைப்பாலம் பகுதியை சேர்ந்தவர், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரில், 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, 48.59 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிவித்தார்.

மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணைக்கு பின், திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாகடை பகுதியை சேர்ந்த ஆண்டோ பிஜு, 25, என்பவரை நேற்று கைது செய்தனர்.

இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:

கடந்த, 2024 நவ., மாதம் இந்த மோசடி நடந்துள்ளது. 'டெலிகிராம்' ஆப் வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்த படியே 'ஷேர் டிரேடிங் ' செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

அதை நம்பி, 'டெபாசிட்' தொகையாக, 48.59 லட்சம் ரூபாயை, ஆண்டோ பிஜு என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார். ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்று, அந்த பணத்தில், 2.25 லட்சம் ரூபாயை காட்டாகடை பகுதியில் அவரது மற்றொரு வங்கிக் கணக்கிற்கு பரிமாற்றம் செய்துள்ளார்.

இவ்வழக்கு தவிர, இந்த வங்கி கணக்கு மீது தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இரு 'ஆன்லைன்' மோசடி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, ஆண்டோ பிஜு கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement