ஜனநாயக உரிமையை பறிப்பது தான் சமூக நீதியா: திமுகவுக்கு பாஜ தலைவர் கண்டிப்பு

சென்னை: ஜனநாயக உரிமையை பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நகேந்திரன் நகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி சென்னையில் கடந்த 13 நாட்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியுள்ள திமுக அரசின் அடக்குமுறை துளியும் மனிதாபிமானமற்றச் செயல். தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களை, ஏதோ கொலைக் குற்றவாளிகள் போல அடித்துத் துன்புறுத்தி வெளியேற்றியுள்ள திமுக அரசையும் அதன் ஏவல்துறையையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உயர்நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த சில நிமிடங்களிலேயே நூற்றுக்கணக்கான காவல்துறையினரைப் போராட்டக் களத்தில் குவித்த திமுக அரசு, போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் மீது இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த கோபத்தையும் வன்மத்தையும் ஒருசேர கட்டவிழ்த்து விட்டுள்ளது. வெறும் வீடியோ ஷூட்டுக்காக தூய்மைப் பணியாளர்களுடன் முதல்வர் தேநீர் அருந்தியதையும், உணவு உட்கொண்டதையும் ஏதோ இமாலய சாதனை போல பெருமை கொள்ளும் திமுகவினருக்கு அம்மக்கள் மீது மதிப்போ மரியாதையோ கொஞ்சம் கூட இல்லை என்பதைத் தான் இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.
இரவு, பகல் பாராது போராடிய மக்களைச் சென்று சந்திக்க மனமில்லாத முதல்வர் ஸ்டாலினுக்கு திரைப்படக் குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதற்கு மட்டும் நேரமிருக்கிறது என்பது வெட்கக்கேடு. ஒருவேளை மனசாட்சியின் அடிப்படையில் முதல்வர் அம்மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருந்தால் இந்தப் பிரச்சினை எப்போதோ முடிவுக்கு வந்திருக்கும். தூய்மைப் பணியாளர்களும் இந்தளவிற்குத் துன்பப்பட்டிருக்க மாட்டார்கள். அதை விட்டுவிட்டு தங்கள் வாழ்வாதாரத்திற்காகப் போராடும் ஏழை எளிய மக்களை ஒடுக்கி அவர்களின் ஜனநாயக உரிமையைப் பறிப்பது தான் திமுகவின் சமூக நீதியா? ஆளும் அரசு எந்த மக்களைக் காயப்படுத்துகிறதோ, அதே மக்களின் கரங்களால் இந்த அராஜக ஆட்சிக்கு முடிவுரை எழுதப்படும்.
இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு