'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கு எதிரான வழக்கு அபராதத்துடன் தள்ளுபடி

சென்னை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் குறித்த விளம்பரத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை, 1 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

'உங்களுடன் ஸ்டாலின்' என்ற திட்டத்தில், 'ஸ்டாலின்' என்ற பெயரை, தமிழக அரசு பயன்படுத்த தடை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழக்கு தொடர்ந்தார்.

அதே திட்டம் குறித்த விளம்பரத்தில், கருணாநிதி புகைப்படம் இடம் பெற்றிருப்பதோடு, 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற பெயரையும் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி, அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகி இனியன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 'உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, 'அரசு திட்ட விளம்பரங்களில், முன்னாள் முதல்வர்கள், சிந்தாந்த தலைவர்கள் புகைப்படம், கட்சி கொடி, சின்னமும் பயன்படுத்தக்கூடாது' என, உத்தரவிட்டிருந்தது.

'உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின்' ஆகிய திட்டங்களை, அதே பெயரில் செயல்படுத்த அனுமதி கோரி, தமிழக அரசு தரப்பில், திருத்த மனு தாக்கல் செய்யப்பட்டன.

அதேநேரம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தி.மு.க., தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.வி.சண்முகத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், தமிழக அரசின் திருத்த மனு, இனியன் தாக்கல் செய்த மனு ஆகியவை, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில், நேற் று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசு தரப்பில், 'இவ்விவகாரம் தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 10 லட்சம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்துள்ளது' என கூறி, உத்தரவு நகலை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து, வழக்கறிஞர் இனியனுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, அவரது மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதேபோல சேலை யூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

Advertisement