அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 3 பேர் கைது

துாத்துக்குடி:அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக, வீட்டில் பட்டாசு தயாரித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி ஆலைகளும், பட்டாசு ஆலைகளும் உள்ளன. இந்நிலையில், தெற்கு கழுகுமலை கிராமத்தில் வாடகை வீட்டில் எந்தவித அனுமதியும் இல்லாமல், சட்ட விரோதமாக பேன்சி பட்டாசுகள் தயாரிப்பதாக கழுகுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின்படி, போலீசார் நேற்று, திடீர் சோதனை நடத்தினர். அந்த வீட்டில் பல்வேறு வகையான பேன்சி பட்டாசுகள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

வீட்டில் இருந்த சிவகாசி மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்த ரீகன், 35, பாறைபட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன், 46, துலுக்கர்பட்டியை சேர்ந்த செல்வகுமார், 40, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பட்டாசு தயாரிப்பதற்காக அவர்கள் வைத்திருந்த உபகரணங்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Advertisement