போலீஸ் தடுத்தும் நிறுத்தாமல் 'பறந்த' டிரைவர் பிடிபட்டார்

நொய்டா:போலீஸ் தடுத்தும் நிறுத்தாமல் அதிவேகமாக சென்ற டாக்ஸியை, போலீசார் துரத்திய போது, வண்டியில் இருந்த குடும்பத்தை பணயக்கைதியாக பயன்படுத்திய டாக்ஸி டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு பெயர்களில் இருந்த ஆதார் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிரேட்டர் நொய்டாவில் வசிப்பவர் சஞ்சய் மோகன். வாடகை டாக்ஸியில் தன் மனைவி மற்றும் நான்கு வயது மகளுடன், 14ம் தேதி மதியம் 1:30 மணிக்கு புதுடில்லி கன்னாட் பிளேஸ் சென்றார். நொய்டா பார்த்தலா மேம்பாலம் அருகே வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்த போலீசார், டாக்ஸியை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், டிரைவர் வண்டியை நிறுத்தாமல் அதிவேகமாக போலீஸ் தடுப்புகளை தாண்டிச் சென்றார்.

டாக்ஸிக்குள் இருந்த தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். வண்டியை நிறுத்துமாறு கூறினர். ஆனால், டிரைவர் நிறுத்தவில்லை. மேலும், போலீசாரும் தங்கள் ஜீப்பில், டாக்ஸியை விரட்டி வந்தனர்.

காரை நிறுத்தி தங்களை இறக்கிவிடுமாறு சஞ்சய் மோகனும் அவரது மனைவியும் கெஞ்சினர். நான்கு வயது சிறுமி பயத்தில் அலறினாள். ஆனாலும், வண்டியை நிறுத்தாமல் அதிவேகமாக சென்ற டிரைவர், டி.பி. நகரில் தம்பதியை இறக்கி விட்டு, பறந்தார்.

இ ந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், டாக்ஸி டிரைவரை தேடி வந்தனர். இந்நிலையில், சஹாரா காட் பகுதியில் நேற்று கைது செய்யப்பட்ட டாக்ஸி டிரைவரிடம் இருந்து, நசீம் மற்றும் சோனு ஆகிய இரு பெயர்களில் இருந்த ஆதார் அட்டைகள் மற்றும் 'வேகன் ஆர்' கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

அவருக்கு, 29,500 அபராதம் விதிக்கப்பட்டு, விசாரணை நடக்கிறது. இந்த சம்பவத்தின் போது, மோகன் மனைவிக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Advertisement