ஹுமாயூன் தர்கா விபத்து உயிரிழப்பு 7 ஆனது

புதுடில்லி:டில்லி ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் தர்கா இடிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை, ஏழாக உயர்ந்தது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டில்லி நிஜாமுதீனில் முகலாய பேரரசர் ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் அமைந்துள்ள ஷெரீப் பட்டே ஷா தர்ஹாவின் ஒரு பகுதி நேற்று முன் தினம் மாலை 3:30 மணிக்கு இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் சிக்கி ஸ்வரூப் சந்த்,79, மொயினுதீன்,37, அனிதா சைனி,58, மீனா அரோரா,56, அவரது மகள் மோனு அரோரா,25, உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட முகமது ஷமீம், ஆர்யன், குடியா, ரபாத் பர்வீன் மற்றும் ராணி,65, உட்பட 12 பேர் சப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்படனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து, நிஜாமுதீன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தர்ஹாவின் இரண்டு அறைகள் - ஒரு இமாம் மற்றும் ஒரு ஓய்வு அறை - பாழடைந்த நிலையில் இருந்ததும், பலத்த மழையால் கூரை மற்றும் சுவர் இடிந்து விழுந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மழைக்காக ஒதுங்கியோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

Advertisement