கோழி இறைச்சிக்கழிவுடன் வந்த வாகனம் சிறைபிடிப்பு

கோவை: வெள்ளலுார் கிடங்குக்கு கோழி இறைச்சி கழிவுடன் வந்த வாகனத்தை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கும், மக்காதது, 'இ-வேஸ்ட்' என தினமும், 1250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பையை வெள்ளலுார் கிடங்கில் கொட்டுவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. கோழி இறைச்சி கழிவுகளும் வெள்ளலுார் கிடங்கில் புதைக்கப்படுவதால், சுகாதார சீர்கேடு பிரச்னை எழுவதாக, குமுறல்கள் எழுகின்றன.

இந்நிலையில், கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிவந்த மாநகராட்சி வாகனத்தை, வெள்ளலுார் கிடங்கு நுழைவாயிலில், அப்பகுதி மக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

குறிச்சி - வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் கூறுகையில், ''வெள்ளலுார் கிடங்கில் கோழி கழிவுகளை மேலாண்மை செய்யும் நிறுவனத்தினர், கர்நாடக மாநிலம் மைசூரு எடுத்துச் செல்வதாக கூறுகின்றனர். ஆனால், அவை முழுமையாக கொண்டு செல்லப்படுகிறதா என்று தெரியவில்லை. ரத்தம் ஒழுக, ஒழுக ரோட்டில் சுகாதாரமற்ற முறையில், துர்நாற்றத்துடன் கோழிக்கழிவுகளை கொண்டு வருகின்றனர். வெள்ளலுார் கிடங்குக்கு கொண்டு வராமல், அந்தந்த பகுதிகளில் இருந்தே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement