புரோக்கர் கும்பல் மிரட்டலால் கல்லீரலை விற்ற பெண்; கிட்னியை தொடர்ந்து பள்ளிபாளையத்தில் கிளம்பியது 'அடுத்த பூதம்'
பள்ளிப்பாளையம்: ''கிட்னி விற்பதற்காக மேற்கொண்ட மருத்துவ செலவு தொகையை கேட்டு மிரட்டியதால், கல்லீரலை விற்றேன்,'' என, பள்ளிப்பாளையம் பெண் தெரிவித்துள்ள புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். குறைந்த சம்பளம் என்பதால், அதிக வட்டிக்கு கடன் வாங்கி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
இதனால், ஒரு கட்டத்தில் கடனை திருப்பி செலுத்த முடியாமல், வட்டி, மீட்டர் வட்டி என, கடன் சுமை அதிகரிக்கிறது. அவற்றை செலுத்த முடியாமல் விழிபிதுங்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு வறுமையில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை குறிவைத்து, 'கிட்னி விற்பனை செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும்' என, புரோக்கர்கள் மூளைச்சலவை செய்கின்றனர். சிக்கும் தொழிலாளர்கள், தங்களின் ஒரு கிட்னியை விற்பனை செய்கின்றனர்.
ஆனால், சொன்னபடி பணத்தை தராமல் ஏமாற்றிவிடுகின்றனர். இதில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்படி, 10 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. பின், போலீசாரின் கிடுக்கிப்பிடியால், புரோக்கர்களின் நடமாட்டம் படிப்படியாக குறைந்தது.
மூளைச்சலவை இந்நிலையில், கடந்த மாதம், பள்ளிப்பாளையம், அன்னை சத்யா நகர் பகுதியில் புரோக்கர் ஆனந்தன், வறுமையில் வாடும் தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, 'ஒரு கிட்னி கொடுத்தால், 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்' என, ஆசைகாட்டி கிட்னி விற்பனை செய்ய வைத்தது தெரியவந்தது.
தகவலறிந்த சென்னை சுகாதார துறை சட்டப்பிரிவு இணை இயக்குனர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், பள்ளிப்பாளையம் அருகே, அலமேடு பகுதியை சேர்ந்த பேபி, 37, என்ற பெண் தொழிலாளி, தான் வாங்கிய கடனுக்காக கல்லீரலை, 4.50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் மகள், மகனுடன் அலமேடு பகுதியில் தனியாக வசித்து வருகிறேன். விசைத்தறி வேலை செய்து வருகிறேன். வாங்கிய கடனை கட்ட முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள், பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். நான் கடன் தொல்லையில் இருப்பதை அறிந்த பெண் புரோக்கர் கலா என்பவர், என்னை அணுகி கிட்னி விற்றால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என, தெரிவித்தார்.
பணம் கிடைத்தால் கடனை அடைத்து நிம்மதியாக வாழலாம் என நினைத்து, கிட்னி விற்க முடிவு செய்தேன். என்னை சென்னைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த போது, என் கிட்னியை எடுத்து பொருத்த முடியாது என, தெரிவித்து விட்டனர்.
உடல் பலவீனம் இதையடுத்து, புரேக்கர்கள், எனக்கு செய்த மருத்துவ செலவுக்கான பணத்தை கேட்டனர். இல்லையென்றால், கல்லீரரை விற்பனை செய்யுமாறு மிரட்டினர். மேலும், கல்லீரல் கொடுத்தால், 8 லட்சம் ரூபாய் பணம் கிடைக்கும் என, தெரிவித்தனர். இதனால் கல்லீரலை, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விற்பனை செய்தேன்.
ஆனால், 4.50 லட்சம் ரூபாய் தான் கொடுத்தனர். தற்போது எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உடல் பலவீனமாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன், கிட்னி பிரச்னை குறித்து, 'டிவி' மற்றும் செய்தித்தாள்களில் வந்த செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
அதனால், எனக்கும் மருத்துவ செலவுக்கான தீர்வு கிடைக்கும் என்பதால், இந்த கல்லீரல் பிரச்னை குறித்து கூறுகிறேன். எனக்கு, தமிழக அரசு மருத்துவ உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கிட்னி விற்பனை முறைகேடு கொழுந்துவிட்டு எரியும் நிலையில், அடுத்ததாக ஏழை பெண்ணிடம் கல்லீரலை விற்க செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, தமிழக அரசு முறையாக விசாரித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும்
-
குஜராத் பள்ளியில் கொடூரம்: 8ம் வகுப்பு மாணவர் குத்தி கொலை
-
கூட்டணி கட்சிகளுக்குள் சிக்கி தவிக்கும் திருமாவளவன்: நயினார் நாகேந்திரன் ஆதங்கம்
-
தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்க சர்வதேச சதி வலை!
-
போக்குவரத்துக் கழகத்துக்கு குத்தகை முறையில் ஊழியர்கள் நியமனம்: அன்புமணி கண்டனம்
-
மதிமுகவில் இருந்து மல்லை சத்யா சஸ்பெண்ட்: அறிவித்தார் வைகோ
-
'பெர்ட்ரம்' டென்னிஸ் போட்டி கோவை பி.எஸ்.ஜி., அணி வெற்றி